சினிமாக்காரர்கள் தாமினி மனதை மாற்றிவிட்டார்கள் - சந்துரு தரப்பில் புகார்
சந்துரு தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் சேரன் மகள் தாமினி.
ஒரே காரில் தாமினி, அவரது தாயார் செல்வராணி, இயக்குநர் அமீர், பள்ளி தலைமை ஆசிரியர்,இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் வந்தனர்.
சந்துரு தரப்பில் தாய் ஈஸ்வரி, 2 சகோதரிகள் வந்திருந்தனர். நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி நீதிபதிகளைப் பார்த்து தெரிவித்தார்.
சந்துரு வக்கீல் எதிர்ப்பு
இதற்கு சந்துருவின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். "தாமினி மன அழுத்தத்தில் இருக்கிறார். முன்பு காதலனுடன் செல்ல சம்மதித்தவர் இப்போது மாற்றிச் சொல்கிறார். இதற்கு பெற்றோர் நிர்ப்பந்தமே காரணம். 2 வார காலத்தில் அவர் மனதை மாற்றி விட்டார்கள்," என்றார்.
உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, "தாமினி மேஜர் பெண். அவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்து இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் எங்களால் ஏற்க முடியும்'' என்றனர்.
திருமணமாகவில்லையே...
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "தாமினிக்கு இன்னும் திருமணம் நடை பெறவில்லை. அதற்கு முன் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. திருமணம் முடிந்திருந்தால் கணவருடன் செல்வது பற்றி முடிவு எடுக்கலாம். திருமணம் ஆகாத பெண் பெற்றோருடன் செல்ல முடிவு எடுக்கும் போது அதைத்தான் நீதிமன்றம் ஏற்க முடியும்," என்றனர்.
வக்கீல் சங்கரசுப்பு தனது வாதத்தின்போது, தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம். 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்ப் பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார்.
உடனே நீதிபதிகள், "எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா?" என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர்.
அதற்கு வக்கீல், "இந்த 2 வாரங்களில் ஏராளமான சினிமாகாரர்கள் பார்த்து மனமாற்றம் செய்து விட்டார்கள் என்று சொல்ல வவந்தேன். இந்த விவகாரத்தில் திரும்பவும் மனு தாக்கல் செய்கிறோம்," என்றார்.
இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு மனுதாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். வக்கீல் சங்கர சுப்பு மனு தாக்கல் செய்த பின்பு நீதிபதிகள் அதில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.