செல்போன் சிக்கியதாக கூறப்பட்ட நளினியின் சிறை அறையை மாஜிஸ்திரேட் பார்க்கிறார்!
வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தங்கியிருக்கும் சிறை அறையை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேலூர் மாஜிஸ்திரேட் முடிவு செய்துள்ளார்.
மாஜிஸ்திரேட்டுடன், அரசு வக்கீல், நளினி தரப்பு வக்கீல்களும் உடன் செல்கிறார்கள்.
செல்போன் சிக்கியதாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் இந்த ஆய்வை நீதிபதி மேற்கொள்ளவுள்ளார்.
சிறையில் சிக்கிய செல்போன்
வேலூர் மகளிர் சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது நளினி அறையில் செல்போன் சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
கோர்ட்டில் ஆஜரான நளினி
இந்த வழக்கின் விசாரணைக்காக நளினி வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரானார்.
சிறைக் கண்காணிப்பாளரின் சாட்சியம்
இந்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மாஜிஸ்திரேட் மும்மூர்த்தியிடம் சாட்சியம் அளித்தார். நளினி அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் செல்போனை அவர் அடையாளம் காட்டினார்.
கட்டப் பை..பிளாஸ்டிக் வாளி...
மேலும் செல்போன், பிளாஸ்டிக் வாளி, கட்டப் பை உள்ளிட்டவையும் பிற சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டது.
23ம் தேதி அறையில் ஆய்வு
சாட்சிகள் விசாரணையைத் தொடர்ந்து வருகிற 23ம் தேதி நளினி இருந்த அறைய நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என்று மாஜிஸ்திரேட் அறிவித்தார். இந்த ஆய்வில் மாஜிஸ்திரேட்டுடன், அரசு வக்கீல், நளினியின் வ்ககீல்களும் பங்கேற்கவுள்ளனர்.
பின்னர் விசாரணை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.