தனக்கு ஓட்டு போடாதவர்கனின் வீடுகளை இடித்த ஊராட்சி மன்ற தலைவர்: கிராம மக்கள் புகார்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனக்கு ஓட்டு போடவில்லை என்ற காரணத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் திட்டமிட்டு வீடுகளை இடித்தாக கிராமமக்கள் புகார் கூறியுள்ளனர்.
மானாமதுரை ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியைச் சேர்ந்தது பாப்பான்குளம் கிராமம்.சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராணி சோனைமுத்துவும், மதிமுகவைச் சேர்ந்த அம்சவள்ளிதங்கராசுவும் போட்டியிட்டனர். பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் இதுவரை இவர்கள் இருவர் மட்டுமே மாறி மாறி தலைவர் பதவி வகித்து வருகின்றனர். ஒருவர் பதவியேற்றவுடன் எதிர்தரப்பினருக்கு ஓட்டுப்போட்டவர்களை பழிவாங்குதை முதல் வேலையாக வைத்துள்ளனர். தற்போது பொறுப்றேற்ற அம்சவள்ளி தங்கராசும் அந்த வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார். இரு தரப்பினரும் மீதும் மானாமதுரை மற்றும் சிப்காட் காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராம காலனியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பசுமை வீடு, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட திட்டத்தின் கீழ் பலரும் 40 வருடங்ஙகளாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். தற்போதைய சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அம்சவள்ளிக்கு காலனிவாசிகள் ஓட்டு போடவில்லை என்று கூறப்படுகிறது. இதனை முன்விரேதமாக கொண்டு அம்சவள்ளியின் க வர் தங்கராசு அரசு நிலத்தில் ஆக்ரமித்திருப்பதாக கூறி வீடுகளை இயந்திரங்கள் மூலம் சுதந்திர தினத்தன்று தொடங்கி மூன்று நாட்களாக இடித்துள்ளார்.
கிராம மக்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வெளியே சொல்ல கூடாது என தடுத்துள்ளார். 50க்கும் மேற்பட்ட வீடுகளை சராமாரியாக இடித்துள்ளார். இதில் அவருக்கு ஓட்டு போட்டவர்களின் வீடுகளை தவிர்த்து மற்ற வீடுகளை குறிவைத்து இடித்தாக கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக இந்திரா என்பவர் கூறுகையில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1லட்சத்து 30ஆயிரம் பணமும் கையில் வைத்திருந்த பணத்தையும் வைத்து 4 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டியுள்ளேன், இதில் ஒரு லட்ச ரூபாய் மட்டும் பெற்றுள்ளேன், தலைவர் 10ஆயிரம் லஞ்சமாக பெற்று கொண்டார். இன்னமும் 30ஆயிரம் வரவில்லை அதற்குள் வீட்டை இடித்துவிட்டனர் என்றார். வேணி என்பவர் கூறுகையில் எனது மகளுக்கு வரும் 30ம் தேதி திருமணம் வைத்துள்ளேன். இந்நிலையில் திருணமத்திற்காக வீட்டை புதுப்பித்து வெள்ளையடித்துள்ளேன் இந்த சமயத்தில் ஏன் ஓட்டு போடவில்லை என கூறி வீட்டை இடித்து விட்டனர் என்று கூறி கதறி அழுதார்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசு கூறும் போது ஆக்ரமித்து வீடு கட்டினர் அதனால் இடித்தோம் என்று கூறியுள்ளார். பாப்பான்குளம் கிராமத்தில் ஆக்ரமிப்பு என்பது வெறும் ஒரு அடி மட்டும்தான் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஓட்டு போடவில்லை என்ற காரணத்தை கூறி வீடுகளை இடித்ததுடன் கிராமமக்களை வெளியில் சொல்ல கூடாது என தடுத்து மிரட்டியுள்ளார் ஊராட்சி மன்ற தலைவர். அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தும் ஊராட்சி மன்ற தலைவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக மானாமதுரை பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையில் குழந்தைகளுடன் வெட்ட வெளியில் பரிதவித்து வருகின்றனர் கிராமமக்கள்.