இந்தியா கலந்து கொள்ளாவிட்டாலும் காமன்வெல்த் மாநாடு நடைபெறும்: ஞானதேசிகன்
சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா கலந்து கொள்ளாவிட்டாலும் காமன்வெல்த் மாநாடு நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மூலம் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலை, உணவு மற்றும் தகவல் பெறுதல் ஆகிய உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் அரசின் மகத்தான சாதனையாகும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டடம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள திருத்தங்களை ஆய்வு செய்து தேவையானவை ஏற்றுக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவிóத்துள்ளார். எனவே, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதா கட்டாயம் நிறைவேறும்.
உ.பா.வால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை
இந்தச் சட்டத்தினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1,60,000 டன் உணவு தானியங்கள் கிடைக்காமல் போகும் என தமிழக அரசும், சில அரசியல் கட்சிகளும் சந்தேகம் எழுப்பியுள்ளன. ஆனால், தமிழகத்துக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் குறைக்கப்படாது என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் உறுதி அளித்துள்ளார்.
உ.பா. ஒரு புரட்சிகரமான சட்டம்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஓர் புரட்சிகரமான சட்டம். இதனால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
கற்பனையில் நரேந்திர மோடி
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவராகவே நாளைய பிரதமர் என கற்பனை செய்து கொண்டு பேசி வருகிறார்.
தெருச்சண்டை போல சவால் விடுகிறார்..
தெருச்சண்டையில் சவால் விடுவதுபோல பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார். இதற்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பதிலளிப்பார்கள்.
காமன்வெல்த் மாநாடு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் என்ன லாபம், கலந்து கொள்ளாவிட்டால் என்ன லாபம் என்பதை எதிர்ப்பாளர்கள் விளக்க வேன்டும். இந்தியா பங்கேற்காவிட்டாலும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறும்.
மீனவர் நலனில் அக்கறை
தமிழக மீனவர்களைக் காப்பாற்ற தமிழக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு நடத்த அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் செய்வதன் மூலம் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றார் அவர்.