மணல் குவாரி மோசடி... விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
தூத்துக்குடி: கடல் தாது மணல் குவாரிகளில் ஆய்வுப்பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி நிருபர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் விவி மினரல், பிஎம்சி உள்ளிட்ட கடல்மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் சிறப்பு ஆய்வுக்குழுவினர் முதல்கட்ட ஆய்வுப்பணிகளை தொடர்ந்து 19, 20ம் தேதிகளில் இரண்டாம் கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனனர். இந்நிலையில் கடற்கரையோர கடல்தாது மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றும் நடந்தது.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிராமமக்கள், மீனவர்கள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்று கோரிக்கை தொடர்பான மனுக்களை சிறப்பு ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடியிடம் கொடுத்தனர். கூட்டத்தில், கலெக்டர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெரியதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை, தோமையார்புரம் உள்ளிட்ட பகுதிளில் இருந்து வந்திருந்த 200க்கும் மேற்ப்பட்ட மீனவப் பெண்கள் மணல் ஆலைகளால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மணல் ஆலைகளுக்கு நிரத்தர தடை விதித்து அவற்றை மூடவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் ஆய்வுக்குழுவினரிடம் மனுவும் கொடுத்தனர்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவி மினரல் தாதுமணல் குவாரிக்கு ஆதரவாகவே மனு கொடுத்தனர். சிலபல மனுக்களைத்தவிர பெரும்பாலான மனுக்கள் ஆதரவாகவே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துகேட்பு கூட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நேற்றும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கருத்துகேட்பு கூட்டத்தை தொடர்ந்து ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி நிருபர்களிடம் கூறுகையில், அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு 2ம் கட்ட ஆய்வுப்பணிகளை முடிந்துள்ளது. இந்த ஆய்வின்போது கிராமமக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களும் கேட்டு அறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுப்பணிகளை தொடர்ந்து குறிப்பிட்ட தேதிக்குள் அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.
முன்னதாக நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மணல்குவாரிகளின் உரிமையளார்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் நடந்த விசாரணையில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், அவரது சகோதரரான பி.எம்.சி நிறுவன அதிபர் சுகுமாறன் ஆகியோர் தனித்தனியாக பங்கேற்று தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
விசாரணையை முடித்துக்கொண்டு வெளியே வந்த வைகுண்டராஜனிடம் நிருபர்கள் கேட்டபோது ''நான் என்ன சொன்னாலும் நீங்கள் திரித்துதான் எழுதப்போகிறீர்கள் அதனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்று கூறியபடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.