இனி தலைமைச் செயலக ஊழியர்கள் ஜில்லுன்னு வேலை பார்க்கலாம்... 'ஜிம்' வருதுல்ல!
சென்னை: தலைமைச் செயலக ஊழியர்களுக்காக உடற்பயிற்சிக் கூடம் அதாவது ஜிம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பெரும் பொருட் செலவில் இந்த ஜிம்கள் அமைக்கப்படுகின்றன.
ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் தனித் தனியாக இந்த ஜிம்கள் அமைக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
6000 ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களிலும் பணி
அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியம் முக்கியம்
ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக் காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும்.
சகல வசதிகளுடன்
எனவே, அரசு ஊழியர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை, தலைமைச் செயலகத்தில் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக
இதன் அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும்.
20 வகையான கருவிகள்
இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக் கருவிகளை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆரோக்கியமான தமிழகம் உருவாகும்
அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.