குற்றவாளிக்கு கூடுதல் தண்டனை கோரி வினோதினியின் தந்தை மேல்முறையீடு
காரைக்கால்: குற்றவாளிக்கு தூக்கு அல்லது இரட்டை ஆயுள் தண்டனை கோரி மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதியின் தந்தை கூறியுள்ளார்.
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி ஆசிட் வீசப்பட்டு, பலியான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை செய்ய முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,வினோதினியின் தந்தை ஜெயபால் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது குறித்த வழக்கில், சுரேஷுக்கு மேலும் நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளி சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வினோதினியின் தந்தை ஜெயபால், குற்றவாளிக்கு தூக்கு அல்லது இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்பார்த்தோம். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது.
குற்றவாளி மேல்முறையீடு செய்யும்போது, கூடுதல் தண்டனை கோரி நாங்களும் மேல்முறையீடு செய்வோம் என்று கூறினார்.