ஐ.ஒ.பி வங்கி சேவை 4வது நாளாக முடக்கம்… வாடிக்கையாளர்கள் பாதிப்பு
பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வங்கி நாடு முழுவதும் மூவாயிரம் கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த வங்கியில் கடந்த 19ம் தேதி முதல் மைய வங்கி கோர் பேங்கிங் கணினி இணைப்பில் (சர்வர்) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற அன்றாட வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கோளாறால் நாடு முழுவதும் ஐ.ஓ.பி.,யின் வங்கி ஒட்டு மொத்த நடவடிக்கைகள் கடந்த 4 நாட்களாக முடங்கியுள்ளன.
இதுகுறித்து ஐ.ஓ.பி.,யின் மேலாளர் கூறியதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சர்வரில் திடீரென கோளாறு ஏற்பட்டது. தாற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோளாறை சரிசெய்ய சிங்கப்பூரில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு அவர்கள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று இரவுக்குள் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டு வங்கிப் பணிகள் நாளை வழக்கம்போல் நடைபெறும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடலோர ஆந்திராவில்
இதனிடையே வங்கி சேவை பாதிப்பினால் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களாக ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் கையில் பணமின்றி மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.