போலி வீடியோவை வெளியிட்டதற்காக அமிதாபிடம் மன்னிப்பு கேட்ட குஜராத்தி இசையமைப்பாளர்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை என்று கூறியது போன்றும் அவர் பிரதமராக ஆக ஆதரவு தெரிவிப்பது போன்றும் உள்ள வீடியோ நேற்று இரவு யூ டியூப்பில் வெளியானது. இதைப் பார்த்து அதிர்ந்த அமிதாப் உடனே ட்விட்டரில், இது போலி வீடியோ நான் மோடியை புகழ்ந்து பேசவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோட் செய்தவர் யார் என்று தெரிய வந்துள்ளது. உத்பல் ஜீவ்ரஜனி என்பவர் தான் அந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளார். அதற்காக அமிதாபிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர் அந்த வீடியோவை உடனே நீக்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் குஜராத்தி திரை உலகில் இசையமைப்பாளராக உள்ளேன். நான் மோடியின் ரசிகன். நான் வாட்ஸ் ஆப்-இல் உள்ளேன். அதன் மூலம் தான் யாரோ எனக்கு இந்த வீடியோவை அனுப்பினார்கள். நான் அந்த வீடியோவை தயாரிக்கவும் இல்லை, எடிட் செய்யவும் இல்லை. வாட்ஸ்ஆப்-இல் வந்ததை நான் அப்லோட் செய்தேன். வீடியோவை அப்லோட் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.