நீரா ராடியா டேப். 'லீக்' செய்தவர்கள் நடவடிக்கை எடுக்க ரத்தன் டாடா வலியுறுத்தல்!
டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக டாடா குழுமத்துக்கு சார்பானவராக செயல்பட்ட நீரா ராடியா, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் குழும நிதியினால் தொடங்கப்பட்டது என்றும் போட்டுக் கொடுத்திருந்தார்.
தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ரத்தன் டாடா பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது ரத்தன் டாடாவும் நீதிமன்றத்துக்கு வந்து தமது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதங்களை உன்னிப்பாக கவனித்தார். ஹரீஷ் சால்வே தமது வாதத்தின் போது, நீதிமன்ற நடைமுறைகள் கண்ணியத்துக்குரியவை. ஆனால் டெல்லியைச் சேர்ந்த நாளிதழ் இந்த கண்ணியத்தை மீறி நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டிருக்கிறது. நீதிமன்றம் அந்த நாளிதழ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதி சிங்வி கருத்து தெரிவிக்கையில், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் கோப்புகளைக் கையாண்ட ஒவ்வொருவர் மீதுமே சந்தேகப்பட வேண்டியதுள்ளது. சட்டத்தை மீறியோர் நிச்சயம் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்றார்.