குடிநீர் பிரச்சினை: சேலம் மேயர்- அ.தி.மு.க. கவுன்சிலருக்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலம் குகை கருங்கல்பட்டியில் வீரலட்சுமி வித்யாலயா என்ற தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எம். ஷர்மிளாவிற்கு நேற்று காலை ஒரு கடிதம் வந்தது. இதில் கருங்கல்பட்டியில் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. இந்த கடிதம் கண்ட உடன் குடிநீர் வர வேண்டும்.
இல்லை என்றால் உங்கள் பள்ளி, மேயர் சவுண்டப்பன் வீடு, அ.தி.மு.க.கவுன்சிலர் நாகேஸ்வரன் வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். இப்படிக்கு வீர வணக்கம் கழகம் என கூறப்பட்டு இருந்தது. இதை படித்த தலைமை ஆசிரியர் ஷர்மிளா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இதுபற்றி சேலம் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் மர்ம கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பள்ளிக்கு சென்று வெடிப்பொருள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
பின்னர் போலீசார் கருங்கல்பட்டியில் வசிக்கும் மேயர் சவுண்டப்பன் வீட்டிலும், கவுன்சிலர் நாகேஸ்வரன் வீட்டிலும் சோதனை செய்து பார்த்தனர். ஆனாலும் எதுவும் கிடைக்கவில்லை. யாரோ வேண்டும் என்றே வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடிதத்தை கைரேகை நிபுணர்கள் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். மிரட்டல் கடிதத்தில் உள்ள கையெழுத்தும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கையெழுத்தும் ஒத்து போகிறதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குகை, கருங்கல்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.