லண்டனில், பெற்றோர்களை, நண்பர்களை மறந்து கையில் ஐபோன் சகிதம் அலையும் நிஜ ‘கஜினி’
லண்டன்: தினமும், காலையில் எழுந்தவுடன் ‘குட்மார்னிங் மகனே, நான் தான் உன் அப்பா, இவர் உன் அம்மா' என பெற்றோர் தனது 19 வயது மகனிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டிய சூழலில் வாழ்வது எவ்வளவு கொடுமையான ஒன்று.
குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது தாய் தான் மற்ற உறவுகளை அறிமுகம் செய்து வைப்பார். ஆனால் அந்த தாயே தினமும் தனது மகனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டும், அடையாளமாக தான் அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் காட்டி வருகிறாராம் லண்டனில்.
சூர்யாவின் கஜினி படம் பார்த்திருப்பீர்களே, அது போன்ற வாழ்க்கையை நிஞத்த்ஹில் வாழ்ந்து வருகிறார் இந்த 19 வயது லண்டன் இளைஞர்...
விநோத நோய்...
பிரிட்டன், பிரிஸ்டல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 17 வயது இளைஞர் ரிக்கி டீன். பார்த்த விஷயங்கள் உடனடியாக மறந்து போகும் விநோத மூளை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் இவர். மகனிடம் காணப்படும் ஞாபகமறதி நோயை அவனது முன்றரை வயதில் தான் அறிந்துள்ளனர் அவனது பெற்றோரான நிக்கி- கிரே தம்பதியினர்.
ஆக்ஸிஜன் குறைபாடே காரணம்...
ஞாபக மறதிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளான் ரிக்கி. அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் குறைபாடு இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
சிகிச்சை பலனில்லை....
சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும், ரிக்கியின் மூளையில், நிகழ்வுகள் பதிவாவது மெல்ல பாதிக்கப்பட்டது. ஏழாவது வயதில், அதிகப்படியான நிகழ்வுகள், ரிக்கிக்கு மறந்து போக ஆரம்பித்துள்ளது.
ஞாபக மறதி நோய்....
நாளடைவில், அவரின் மூளையில், நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன், மோசமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரிக்கி தன் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, தன் பெற்றோரையும் மறக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
ஐபோன் கிப்ட்....
ரிக்கியின் ஞாபக மறதி நோய்க்கு தற்காலிக தீர்வாக "ஐபோன்' வாங்கிக் கொடுத்தனர் அவரது பெற்றோர். அதில் நண்பர்கள், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரின் புகைப்படங்களை பதிய செய்து, அதன் மூலம், அனைவரையும் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தனர்.
ரிமைண்டர் பாய்....
சில சமயங்களில், அன்றாட பழக்க வழக்கங்களான பல் துலக்குவது, குளிப்பது போன்ற வேலைகள் கூட மறந்து விடுமாம் ரிக்கிக்கு. அதற்கும் ஐபோனில் ரிமைண்டர் வைத்து செயல் படுகிறாராம்.
படிப்பு....
ஆனாலும், மனம் தளராத ரிக்கி தோட்டக்கலை மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகைவன் இல்லை....
தனது விநோதநோய் குறித்து இவ்வாறு கூறுகிறார் ரிக்கி, ‘நேற்று நடந்த விஷயங்களையோ அல்லது நாளை என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையோ என்னால், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மறதி, எனக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதனால் யாரிடமும் நான் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படுவதில்லை.
மன உளைச்சல் இல்லை....
நான் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரண மனிதர்களைப் போல், பழைய நினைவுகளால் கவலைப்படுவதோ, நாளை பற்றிய திட்டமிடுதலால் ஏற்படும் மன உளைச்சலோ எனக்கு கிடையாது. இந்த நோயை நான் சாபமாக கருதவில்லை; வரமாக நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.