கடன்களுக்கான வட்டியை உயர்த்தின ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள்: உங்கள் வீட்டு லோன் நிலை என்ன?
மும்பை: ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைக் காரணம் காட்டி ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகிய வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை நாளை முதலே அமலுக்கு வருகிறது.
வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன்:
இதனால் வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் உயர்கிறது. இந்தக் கடன்களை நீங்கள் ஏற்கனவே வாங்கியிருந்தால் அதற்கான வட்டியும் உயர்த்தப்படும். இதனால், உங்களது இஎம்ஐயின் காலம் நீட்டிக்கப்படும்.
ஒரு சிங்கிள் பேஜ் லெட்டர் வரும்:
0.25 சதவீதம் தானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். நீங்கள் ரூ. 10 லட்சம் வீட்டு லோன் வாங்கியிருந்தால், இனிமேல் மாதம் ரூ. 170 கூடுதலாகக் கட்ட வேண்டும். ஏற்கனவே இசிஎஸ் மூலம் உங்கள் கடனை நீங்கள் கட்டி வந்தால், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை வங்கிகள் மேலும் பல மாதங்கள் உயர்த்திவிட்டு, உங்களுக்கு ஒரு சிங்கிள் பேஜ் லெட்டரை மட்டும், புரியாத பொருளாதார பாஷையில், அனுப்பி வைப்பார்கள்.
90% லோன் காரர்களுக்கு இது பொருந்தும்:
பிக்சட் ரேட்டில் இல்லாமல் floating rate-ல் லோன் வாங்கிய அனைவருக்கும் இது பொருந்தும் (90 சதவீதம் பேர் லோன் வாங்குவது floating rate-ல் தான்).
ரூ. 30 லட்சம் வரையிலான வீட்டு லோனுக்கான வட்டி விகிதம் 10.15ல் இருந்து 10.40 சதவீதமாக நாளை முதல் உயர்த்தப்படுவதாக எச்டிஎப்சி அறிவித்துள்ளது. ரூ. 30 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டி விகிதம் 10.65 ஆக உயர்த்தப்படுகிறது.
சிதம்பரம் அப்படி சொன்னார்.. வங்கிகள் இப்படி செய்தன:
இந்த இரு முக்கிய தனியார் வங்கிகளும் வட்டியைக் கூட்டிவிட்டதால் இனி மற்ற தனியார் வங்கிகளும் இதைக் கூட்டுவார்கள்.
வட்டி விகிதம் எல்லாம் ஏறாது, கவலைப்பட வேண்டாம் என்று நேற்று மாலை தான் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தைரியம் தந்தார். அவர் பேசிவிட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே இந்த இரு வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுவிட்டது.
இப்போதைக்கு குறையாது பாஸ்...:
சரி, இந்த வட்டி விகிதம் கொஞ்ச நாளில் குறையுமா என்றால் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதே நிஜம். காரணம், ரூபாயின் மதிப்பு சரிவால் டாலருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு அதிக ரூபாயை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பதோடு, பெட்ரோல், டீசல் விலைகளும் கூடும். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். இதைத் தடுக்க சந்தையில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக வங்கிகளுக்குத் தரும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி நிச்சயம் அதிகரிக்கும். இதனால் வங்கிகள் மேலும் வட்டியை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர குறைக்க வாய்ப்பில்லை.