காடுவெட்டி குரு விடுதலையாக முடியாது! 3வது முறையாக தே.பா. சட்டத்தின் கீழ் கைது!
சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு 3வது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்த நிலையில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மரக்காணத்தில் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து சில மாவட்டங்களில் பா.ம.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. மரங்கள் வெட்டப்பட்டன. வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதை அடுத்து பா.ம.க.வினர் பலரை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புக் காவல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து தமிழக அரசு சிறையில் அடைத்தது.
பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மே 10 ஆம் தேதி உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஜூலை 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் சிறையில் அடைக்க ஜூலை 3ஆம் தேதி இரண்டாவது முறையாக கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே 2வது முறை கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறையிடமும் குரு விண்ணப்பித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஜூலை 3 ஆம் தேதி கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குரு தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, காடுவெட்டி குரு மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
காடுவெட்டி குரு தற்போது 3வது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.