இந்தியாவில் ஒரு அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. கசப்பான அனுபவங்கள்!
சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா ஒரு சொர்க்கபுரியாக இருந்தாலும் கூட, பெண்களுக்கு அது பெரும் துயரமான இடமாக இருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக மாணவி ஒருவர் கூறியிருக்கிறார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த மாணவியான மிக்கலா கிராஸ், தனது இந்தியப் பயண அனுபவங்களை சிஎன்என் தொலைக்காட்சிக்கு எழுதியிருக்கிறார். அதில், பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை என்றும், இந்தியாவுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பெண்கள் பாலியல் தொந்தரவுகள், ஆண்களிடம் இருந்து அறுவறுப்பான, அநாகரீகமான செயல்களை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் வேதனை வெளியிட்டுள்ளார்.
படிப்பு தொடர்பாக அவர் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு வந்து போனார். தனது அனுபவங்கள் குறித்து அவர் சிஎன்என் ஐரிப்போர்ட் தளத்தில் கூறியுள்ளதாவது...
அட்வென்ச்சர் இந்தியா:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வது என்பது மிகவும் சாகசத்துக்குரியதாக இருக்கிறது. சுற்றிப் பார்க்க அருமையான இடங்கள் அங்கு நிறைய உள்ளன. ஆனால் ஒரு பெண்ணாக நான் அங்கு சந்தித்த அனுபவங்கள் கொடுமையானவை. இந்தியாவில் நாங்கள் சந்தித்த அனுபவங்கள் அழகும், ஆபத்தும் நிறைந்தவையாக உள்ளன.
புனே நகரில் ஒரு பயங்கரம்:
புனே நகரில் நாங்கள் எங்கள் முதல் இரவைக் கழித்தோம். அங்கு நாங்கள் கணேஷா திருவிழாவில் கலந்து கொண்டு நடனமும் ஆடினோம். அத்தோடு நிறுத்தலாம் என்றால் முடியவில்லை.. காரணம். நாங்கள் ஆடியபோது அதை அங்கு கூடியிருந்த ஆண்கள் எங்களது ஒவ்வொரு அசைவையும் வீடியோவில் படமாக்கினர். கேவலமான கோணத்தில் கேமராக்களை வைத்து படம் எடுக்க ஆரம்பித்தனர்.
சேலை வாங்கப் போனால்:
அங்குள்ள பஜாரில் காணப்பட்ட அழகான சேலைகள் எங்களது மனதைக் கொள்ளை கொண்டன. ஆனால் சேலை வாங்கப் போனால், அத்தனை ஆண்களும் எங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். சிலர் எங்களது மார்பகங்களைப் பிடிக்கப் பார்த்தனர், பலர் உடலோடு உரசினர்.
பீச்சில் நடக்கலாம் என்றால்:
இந்தியாவின் அழகான கடற்கரை மணலில் நடக்கலாம் என்று போனால், அங்கு கூடியிருந்த ஆண்கள் எங்களையே சுற்றிச் சுற்றி வந்தனர். அவர்கள் முகத்தைப் பார்த்துக் கோபமாக கத்திய கொடுமையைச் சொல்லவா...
சொர்க்கமும், நரகமும்:
3 மாதம் நாங்கள் இந்தியாவில் இருந்தது சொர்க்கத்தில் இருந்த நரகத்தில் இருந்ததைப் போலவே இருந்தது. பின் தொடர்ந்து வருகிறார்கள், முறைத்துப் பார்க்கிறார்கள், உரசுகிறார்கள், கண்ட இடங்களில் பிடிக்க முயற்சிக்கிறார்கள், சிலர் இன்னும் அறுவறுப்பாகவும் நடந்தனர் என்று வெறுப்புடன் கூறியுள்ளார் மிக்கலா.
மன நல பாதிப்பு:
இந்தியா போய் விட்டுத் திரும்பிய மிக்கலாவுக்கு அங்கு சந்தித்த அனுபவங்கள் மன ரீதியாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாம். அவர் மருத்துவ விடுப்பில் லீவு போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாராம். கவுன்சிலிங்குக்கும் கூட போயுள்ளார்.
2 கற்பழிப்புகளிலிருந்தும் தப்பியுள்ளார்:
இந்திய பயணத்தின்போது 48 மணி நேரத்தில் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்படும் முயற்சியிலிருந்தும் தப்பினாராம் மிக்கலா.
கேட்கக் கூடாத கதை:
"India: The Story You Never Wanted to Hear" என்ற பெயரில் தனது கட்டுரையை அவர் வெளியிட்டுள்ளார். இந்த கட்டுரை வெளியாகி இதுவரை 8 லட்சம் பக்க பார்வைகளைப் பெற்றுள்ளதாம்.