அயோத்தியில் தொடரும் பதற்றம்! வீட்டுக் காவலில் அசோக் சிங்கால்! கைது நடவடிக்கை மும்முரம்!!
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நாளை முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை 84 கிலோ மீட்டர் தொலைவுக்கு சவுராசி கோசி யாத்திரை நடத்துவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இந்த யாத்திரைக்கு மாநில அரசு தடை விதித்தது.
இருப்பினும் திட்டமிட்டபடி யாத்திரை நடத்தப்படும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் 70 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் அசோக்சிங்கால் அலகாபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் தலைமறைவான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அயோத்தி உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.