ஆந்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆனது! 5 பேர் கவலைக்கிடம்!!
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பணியாளர்கள் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்தகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுத்திகரிப்பு ஆலையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென ஆலை தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் பலர் தங்களது உடமைகளை விட்டு விட்டு அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு அகன்று சென்று விட்டனர்.
தகவலறிந்ததும் விசாகப்பட்டினம் நகரிலிருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சுத்திகரிப்பு ஆலைக்கு விரைந்தது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்தத் தீ விபத்தில் முதலில் ஒரு பணியாளர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 37 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆலையின் குளிரூட்டும் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.