கயவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள்... பெண் பத்திரிக்கையாளர் கதறல்
மும்பை: என்னை சீரழித்த கயவர்களை சும்மா விடக்கூடாது, குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாவது வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகைப்பட பத்திரிகையாளர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பையில் கடந்த வியாழன்று பாழடைந்த கட்டிடத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அந்த பெண்ணிற்கு பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், தற்போது அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை தாண்டினாலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தாயார் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்.
நடந்த சம்பவத்தை தன் தாயிடம் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார்.அவர் கூறும்போது, '5 பாவிகளும் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டனர். உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டனர். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை இங்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது.
என்னை சீரழித்த கயவர்களை சும்மா விடக்கூடாது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாவது கொடுக்க வேண்டும். அவ்வாறு கடுமையாக தண்டனை வழங்கப்பட்டால்தான் அது, எனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தகுந்த நிவாரணமாக இருக்கும்' என்றார்.