என்னது இவுக ரிலையன்ஸ் ஆபீசருங்களா? எனக்கு தெரியாதே.. அதிரடிகாட்டிய டினா அம்பானி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகளையே யாரென தெரியாது என்று ஒரே போடு போட்டிருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக டினா அம்பானி சேர்க்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அனுப்பிய சம்மனின்படி அவர் நேற்று பிற்பகல் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் ஆஜரானார்.
கையெழுத்து சரிதான் ..ஆனால் நினைவில் இல்லை
அப்போது சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் யு.யு. லலித், சில ஆவணங்களைக் காண்பித்து அதில் இடம் பெற்றுள்ள கையெழுத்து உங்களுடையதுதானா? என்று டினா அம்பானியிடம் கேட்டார். கையெழுத்துகளைப் பார்வையிட்ட டினா அம்பானி "அவை எனது கையெழுத்துகள்தான். ஆனால், அவை எந்த ஆவணங்கள் என்பதை நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை" என்று கூறியதுடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பற்றி எனக்குத் தெரியாது. அந்த நிறுவனத்துக்கும், நான் சார்ந்த ரிலையன்ஸ் குழுமத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்று எனக்குத் தெரியாது என்றார்.
ரிலையன்ஸ் அதிகாரிகளா? நினைவில் இல்லையே..
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளான சுரேந்தர் பிபாரா, ஹரி நாயரைக் காட்டி இவர்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டதற்கு, அதற்கு டினா அம்பானி இவர்கள் யார் என்பதை என்னால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை என்று அதிரடியாக பதில் கூறினார்.
அனிலை விட கைதேர்ந்த டினா- நீதிபதி ஷைனி
அதைக் கேட்ட நீதிபதி ஓ.பி. ஷைனி, இவர் அனில் அம்பானியை விட பதில் கூறுவதில் தேர்ந்தவர் என்று நக்கலடித்தார்.
உண்மையை மறைக்க முயலும் டினா
லலித்தும், டினாவின் பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய இயக்குநர்களையே ஞாபகப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறாரே என்றார். நீதிபதி அனுமதியுடன் வாதத்தைத் தொடர்ந்த லலித், இந்த வழக்கில் உண்மையை மறைக்க டினா அம்பானி முயல்கிறார்.
அவரது பதிலால் திருப்தியடையாத லலித், சில ஆவணங்களைக் காட்டி குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் குழுமத்துக்கும் உள்ள தொடர்பை நீங்கள் கையெழுத்திட்ட ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறதே என்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் டினா அம்பானியிடம் விசாரணை நடத்தப்பட்டது.