ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கோடிக்கணக்கில் வருவாய் இழந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
டெல்லி: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்து வருவதால் மிகப் பெரிய வருவாய் இழப்பை இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. மே மாதம் 54 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது 65ஐ எட்டிவிட்டது. இது 70ஐ தொடும் நாள் தொலைவிலும் இல்லை.
சரி இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இழப்பு எப்படி ஏற்படுகிறது? என்ற கேள்வி இயல்பானதுதான்..
உஷார் ஒப்பந்தம்
ஐ.பி.எல். மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களுக்கு தனியே ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கின்றனர். 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய வீரர்களுக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 என்ற அடிப்படையில் ஏலத் தொகையை வழங்குவது என்பதாகும். அடுத்த ஏலத்தின் போது தான் இந்த ரூபாயின் மதிப்பு மாற்றி அமைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.பி.எல். வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருப்பதால், இப்போது அவர்களுக்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு உதாரணத்துக்கு
அதாவது 2011-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் 24 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்திய மதிப்பில் அவரது ஊதியம் ரூ.11.04 கோடியாகும். ஆனால் இப்போது ரூ.15.5 கோடி கொடுக்க வேண்டி இருக்கும்.
டோனிக்கு இழப்பு எவ்ளோ?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கும் சுமார் ரூ 6 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
கூடுதல் செலவாம்
இது தொடர்பாக ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க டாலருக்கு நிகராக ஒவ்வொரு இந்திய ரூபாய் மதிப்பு சரிவதன் விளைவு, அது எங்களுக்கு குறைந்தது ரூ.15 லட்சம் கூடுதல் செலவை கொண்டு வந்து விடுகிறது. ஏனெனில் வெளிநாட்டு வீரர்களுக்கு நாங்கள் இன்னும் 35% பாக்கித் தொகை கொடுக்க வேண்டி இருக்கிறது என்றார்.
பேட்மிண்டன், ஹாக்கி வீரர்களுக்கும்தான்
ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பானது பேட்மிண்டன், ஹாக்கி வீரர்களுக்கும்தான் என்கின்றனர் விளையாட்டு வீரர்கள்