மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!!
வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது.
முற்றுகையால் படம் ரத்து
மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் படம் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டது.
கனடா முழுவதும் எழுச்சி மிகு போராட்டம்
தமிழர்களின் தொடர் போராட்டங்களால் கனடாவில் பல திரையரங்குகளில் மெட்ராஸ் கபே திரைப்படம் திரையிடப்படவில்லை.
போராட்டம் மூலமாக பிரசாரம்
15 திரைப் படங்கள் திரையிடப்படும் பெரும் கட்டடமான சினிப்ளெக்ஸ் திரையரங்குக்கு வருகை தந்த மற்ற இன மக்களுக்கும் ஈழத்தமிழர்களின் நியாயமான இன விடுதலைப் போராட்டத்தை பற்றிய வரலாற்று உண்மைகளையும் இலங்கை அரசின் சூழ்ச்சிகளையும் உணர்ந்து கொள்ள இந்தப் போராட்டம் பயன்பட்டது.
ஒருவரைக் கூட அனுமதிக்காமல்..
மற்றொரு திரையரங்கில் தமிழில் திரையிடப்படுவதை அறிந்த மக்கள் எழுச்சியோடு அங்கும் போராட்டம் நடத்தி ஒருவரை கூட படத்தை பார்க்க விடாமல் முற்றுகையிட்டு போராடினர்.
மலையாளகளின் ஆதரவால் திமிர்
தமிழர்களின் போராட்டத்தால் மக்கள் எவருமின்றி காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது கனடா திரை அரங்குகள். ஆனால் படத்தின் விநியோகஸ்தர்களான மலையாளிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்ததால் எப்படியாவது இதே போல் காற்றோடினாலும் 2 வாரம் தாக்குப் பிடிப்போம் என்று திமிராகவே திரையரங்க நிர்வாகிகள் பதிலளித்திருக்கின்றனர். இது தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
தொடரும் போராட்டம்
பொய்யான வாக்குறுதிகளைக் கூறி எதிர்ப்பை மீறி படம் திரையிடப்பட்டால் எத்தனை காலமானாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கனடா வாழ் தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இன்றும் போராட்டம்
மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று மின்னஞ்சல்கள், தொலைபேசி மூலமாகவும் சினிப்ளெக்ஸ் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் அனைத்து கனடா வாழ் மக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.