தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில 2 பிரிவுகளில் பழுது- 450 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலுள்ள 3 மற்றும் 5ம் எண் கொண்ட மின்உற்பத்தி அலகுகளின் பழுதால் 420மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின்உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறந்த செயல்பாட்டிற்காக ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் இயந்திர பழுது, பாய்லர் பழுதுகளால் அவ்வப்போது மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலை அனல்மின்நிலையத்தின் 3ம் மின்உற்பத்தி யூனிட்டில் பாய்லர் பழுது காரணமாகவும், 5வது மின்உற்பத்தி யூனிட்டில் இயந்திர பழுது காரணமாகவும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மின்உற்பத்தி அலகுகளின் பழுதால் 420மெகாவாட் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்உற்பத்தி அலகுகளில் ஏற்பட்டுள்ள பழுதினை சரிசெய்யும் பணிகள் இன்றைக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு என்பது சிலமணிநேரம் மட்டுமே உள்ள நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலைய பாய்லர் பழுதால் மின்வெட்டின் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.