அயோத்தி யாத்திரை.. 'சமாஜ்வாடி- பாஜகவின் மேட்ச் பிக்சிங்' ..சாடுகிறார் திக்விஜய்சிங்
டெல்லி: அயோத்தியில் யாத்திரை நடத்துவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தததும் அதை மாநில அரசு தடுத்ததும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேயா பக்கா மேட்ச் பிக்சிங் என்று வர்ணித்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங்.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்காக யாத்திரை நடத்தப் போகிறோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது. இதைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினர் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள். ஆனால் மாநில அரசு இந்த யாத்திரைக்குத் தடை விதித்தது.
அயோத்தி உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தியிருந்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர்கள் பலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கைது செய்யப்பட்டனர் இருப்பினும் தடையை மீறி யாத்திரை நடத்த முயன்றதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால், டொகாடியா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அயோத்தி ரதயாத்திரை, அதை தடுத்து நிறுத்திய மாநில அரசின் நடவடிக்கையை ஒரு 'மேட்ச் பிக்சிங்' என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் வர்ணித்திருக்கிறார்.
அதாவது ராமர் கோயில் கட்ட யாத்திரை நடத்தப் போகிறோம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் போராட்டத்தால் ராமர் கோயில் ஆதரவாளர்களின் வாக்குகளை உயிர்ப்பித்து பாரதிய ஜனதா தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான யாத்திரயை தடுத்து அந்த இயக்கத்தின் தலைவர்களை சிறையில் அடைத்திருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் வாக்குகளை சமாஜ்வாடியால் பெற முடியும். இப்படி செய்தால் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கான வாக்குகள் பறிபோகும்.
இதனாலேயே இரண்டு கட்சிகளும் சொல்லி வைத்துக் கொண்டு அதாவது மேட்ச் பிக்சிங் பாணியில் யாத்திரையை நடத்துவதாகவும் அதை தடுப்பதாகவும் நாடகமாடிக் கொண்டிருக்கின்றன என்று சாடியிருக்கிறார் திக்விஜய்சிங்.
ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்காலோ, அப்படியெல்லாம் மேட்ச் பிக்சிங் இதுவல்ல.. நாங்களே சிறைக்குப் போகிறோம் என்று பதிலளித்திருக்கிறார்.