உ. பா. திட்டத்தால் தமிழகத்துக்கான உணவு தானிய ஒதுக்கீடு குறையாது: லோக்சபாவில் கே.வி. தாமஸ்
டெல்லி: உணாவு பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழகத்துக்கான உணவு தானிய ஒதுக்கீடு குறையாது லோக்சபாவில் அமைச்சர் கே.வி. தாமஸ் உறுதியளித்துள்ளார்.
லோக்சபாவில் உணவு தானிய பாதுகாப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்து பேசிய அமைச்சர் கே.வி. தாமஸ், நாட்டின் மொத்த விளைச்சலில் அரசின் கொள்முதல் 25% விழுக்காட்டில் இருந்து 35% ஆக அதிகரித்துள்ளது. அதாவது 604 மில்லியன் டன் கொள்முதலாக உயர்ந்துள்ளது.
இந்த உணவு பாதுகாப்பு திட்டத்தால் தமிழகம் மற்றும் கேரளா அரசுகளுக்கான தற்போதைய உணவு தானிய ஒதுக்கீடு குறையாது. மேலும் 17 மாநிலங்களுக்கு தற்போதைய ஒதுக்கீட்டு அளவைவிட உணவு தானிய ஒதுக்கீடு அதிகரிக்கும்.
18 மாநிலங்களுக்கு குறையும். இருப்பினும் ஒரு மாநிலம் கடந்த 3 ஆண்டுகளில் பெற்றுவந்த உணவு தானிய ஒதுக்கீட்டின் சராசரி அளவு வழங்கப்படும்.
வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை விலையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ1.24 லட்சம் கோடி செலவாகும்.
உணவு பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தப்படுவது கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.