உ.பா. திட்டம்.. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்: சோனியா மகிழ்ச்சி
டெல்லி: உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய சோனியா, 2009 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படும் என்று மக்களுக்கு உறுதி அளித்திருந்தோம். மக்களுக்கான உறுதிமொழியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதின் மூலம் நாட்டு மக்கள் நலனில் இந்திய அரசு எப்படியான அக்கறை கொண்டது என்பது வெளிப்படும். உணவுப் பாதுகாப்பு திட்டத்தால் உணவு தானியங்கள் வீணாவது தடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் எந்த ஒரு குழந்தையும் சத்துணவுக் குறைபாடுடன் இருக்காது என உறுதியளிக்கிறோம். நாடு முழுவதும் இருக்கும் தற்போதைய பொதுவிநியோகத்திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
தற்போது நாம் விநியோகிக்கும் ஆதார் அட்டைதான் எதிர்காலத்தில் போலி ரேஷன் கார்டுகளை முடிவுக்குக் கொண்டுவரக் கூடியதாக இருக்கும். உணவு மானியம் கொடுப்பதில் ஏதேனும் முறைகேடுகள் நிகழுமேயானால் ஆதார் அட்டைகள் நிறுத்தப்படும்.
இந்த உணவு பாதுகாப்பு மசோதாவானது விவசாயிகள் மற்றும் வேளாண்துறையினரின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியது என்றார்.
சோனியா பேசிக் கொண்டிருந்த போது அவரை உரையை ராகுல் காந்தி மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.