இலங்கையில் நவநீதம் பிள்ளை ஆய்வு! கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் செல்கிறார்!!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இன்று கொழும்பில் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் செல்லும் நவநீதம்பிள்ளை, இறுதிப் போர் நிகழ்ந்த கிளிநொச்சி, முள்ளிவாய்க்காலுக்கும் செல்ல இருக்கிறார்
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஒருவார கால பயணத்தை நவநீதம் பிள்ளை மேற்கொண்டிருக்கிறார். கொழும்பில் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை முற்பகலில் அவர் சந்தித்துப் பேசினார்.
ஹக்கீமுடன் ஆலோசனை
கொழும்பில் ஹக்கீமை நவநீதம் பிள்ளை இன்று சந்தித்துப் பேசினார். அமைச்சர் என்ற வகையிலும் முஸ்லிம்கள் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நவநீதம்பிள்ளை கேட்டறிந்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டம்
அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் போலீசாரிடையேயான சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சகம், நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
யாழில் இருந்து கிளிநொச்சி.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைப் பார்வையிடும் நவநீதம் பிள்ளை, ஏ9 வீதி வழியே பயணித்து கிளிநொச்சிக்கு செல்கிறார். அப்படி செல்லும் வழியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிய இருக்கிறார்.
கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்
கிளிநொச்சியைத் தொடர்ந்து இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளையும் நவநீதம்பிள்ளை பார்வையிடுகிறார்.
திருகோணமலையில்..
தமிழர்கள் வாழும் மற்றொரு பகுதியாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் வரும் 28-ந் தேதியன்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அரசாங்க அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கை ராணுவத்தின் ரகசிய முகாம்கள் பற்றியும் நவநீதம் பிள்ளையிடம் தெரிவிக்கப்பட இருக்கிறது.
வெளிநாடு போன ராஜபக்சே
நவநீதம் பிள்ளை கொழும்பு வந்துள்ள நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென வெளிநாடு சென்றுவிட்டார்.
30-ந் தேதி ராஜபக்சே, த.தே.கூட்டமைப்பினருடன் ஆலோசனை இருப்பினும் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கொழும்பில் வரும் 30-ந் தேதியன்று நவநீதம் பிள்ளை சந்திப்பார் என்று தெரிகிறது.