விவசாயிகளுக்கு 15 தினங்களுக்குள் வறட்சி நிவாரணம் வழங்கப்படும்-கலெக்டர் ரவிக்குமார்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிக்குமார் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டபின்பு கலெக்டர் ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை மாவட்டத்தின் இணையதளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான கணினி பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு கணினி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உட்பட இப்பணிகள் அனைத்தும் இன்னும் 15தினங்களில் முற்றிலுமாக முடிக்கப்படும். விவசாயம் நிலம் யார் பெயரில் இருந்தாலும், விவசாயம் செய்த விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
ஜெயக்குமார் புகார் சொல்றாரே...
கலெக்டர் ரவிக்குமார் இப்படி கூறியுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் கத்தாளம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் தனக்கு வங்கி அதிகாரிகள் நிவாரணம் தர மறுக்கின்றனர் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், நான் விவசாயம் செய்த விவசாய நிலமானது எனது தாயார் பொன்னுத்தாய் பெயரில் உள்ளது. எனது விவசாய பயிர்களுக்காக அரசின் மூலமாக நிவாரணத்தொகை ரூ.14ஆயிரத்து 940யை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தொகையை வங்கிக்கணக்குமூலமாக பெற்றுக்கொள்ளுமாறு விளாத்திக்குளம் கிராம நிர்வாக அதிகாரி என்னிடம் அடையாள சீட்டு கொடுத்துள்ளார். ஆனால் விளாத்திக்குளம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் நிவாரணத் தொகையை தரமறுக்கின்றனர்.
''நிலம் யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் நிவாரணத்தொகை வழங்கமுடியும், அதனால் உங்களது தாயார் பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி நிவாரணத்தொகையை பெறுங்கள்'' என்கின்றனர். எனக்கு வறட்சி நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அம்மனுவில் கூறியுள்ளார்.
கலெக்டர் ரவிக்குமார் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தாமதம் இன்றி வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ள நிலையில், வறட்சி நிவாரணத்தை தரமறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயி மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.