வனவிலங்குகளை பாதுகாக்க ரூ.2.81 கோடி: ஜெயலலிதா ஒதுக்கீடு
சென்னை: வன விலங்குகளுக்கு அவைகள் வசிக்கும் வனப் பகுதியிலேயே நீர் அருந்த வழிவகை செய்யும் புதிய திட்டத்திற்காக 2 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
''வன உயிரின மற்றும் உயிர்பன்மை பாதுகாப்பு பணிகள், சவால்கள் நிறைந்தவையாக உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும், விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவு, நீர் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றிற்காக வன விலங்குகள் இடம் பெயர்ந்து, மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள் வனவிலங்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
இதனைத் தவிர்க்க, விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை விரும்பி உண்ணும் பயிர்களை காட்டுப் பகுதிகளிலேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை ஓரமாகத் தடைகளை அமைப்பது, கிராம மக்களின் திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனித உயிருக்கும், விவசாயப் பயிர்களுக்கும் உடமைகளுக்கும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி, பருவமழை பொய்க்கும் காலங்களில், வனங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், நீரைத்தேடி, வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து அதிக அளவு சேதம் விளைவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, வன விலங்குகளுக்கு தேவையான நீர், அவைகள் வசிக்கும் வனங்களிலேயே கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வனத்திற்குள் 400 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கி மோட்டார் பம்பு ஒன்று ஒவ்வொரு கிணற்றிலும் பொருத்தப்படும். இதன் மூலம், தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படும். பின்னர் இந்த நீர் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படும். மேலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அதிகப்படியான நீர் பைப்புகள் மூலம் திறந்த வெளியில் வன விலங்குகள் நீர் அருந்துவதற்காக தேக்கி வைக்கப்படும்.
இதன் மூலம் வன விலங்குகளுக்கு தேவைப்படும் நேரங்களில் வன விலங்குகள் தாங்கள் வசிக்கும் வனப்பகுதியிலேயே தண்ணீர் நீர்த்தொட்டிகளில் தேக்கி வைக்கப்படும் நீர், தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும், காட்டில் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் அதனை அணைப்பதற்கும், வனப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் பயன்படுத்தப்படும்.
ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய நான்கு இடங்களில் இப்பணிகளை 44 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, மேல் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்காமல், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கக்கூடிய 26 ஆழ்துளை கிணறுகளை ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலுள்ள வனப் பகுதிகளிலும் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் நிறுவுவதற்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மொத்தத்தில் வன விலங்குகளுக்கு அவைகள் வசிக்கும் வனப் பகுதியிலேயே நீர் அருந்த வழிவகை செய்யும் இந்தத் திட்டம் 2 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், வன விலங்குகள் கோடைக் காலங்களில் தண்ணீர் தேடி, மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருவது பெருமளவு தவிர்க்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.