மியான்மர் ஊடுருவல்... மோரே தமிழர் கோயிலில் உள்துறை அமைச்சக குழு ஆய்வு!
இம்பால்: மணிப்பூரின் மோரே அருகே மியான்மர் ராணுவம் ஊடுருவலை அதிகரித்து இருப்பதுடன் இந்திய கிராமங்களையும் ஆக்கிரமிக்க மும்முரம் காட்டுவதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக குழு நேற்று அப்பகுதிகளை பார்வையிட்டது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் லடாக் , வடகிழக்கின் அருணாசலப்பிரதேசத்தின் சீனாவின் ஊடுருவல்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட மணிப்பூர் கிராமங்களையே தமக்குரியதாக உரிமை கோரி ஊடுருவலை நிகழ்த்தி வருகிறது மியான்மர்.
இந்தியா- மியான்மர் இடையேயான உறவிரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்புதிய ஊடுருவல். நீண்டகாலமாகவே மணிப்பூர் எல்லைகளை குறித்துவைத்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்தது மியான்மர்.
மோரே தமிழர் கோயில்
தற்போது இதில் பெரும் பாதிப்புக்குள்ளாகப் போவது மோரே நகரில் வாழும் தமிழர்கள்தான். மோரே தமிழர் கோயிலான அங்காள பரமேஸ்வரி கோயில் இருக்கும் நிலப்பகுதி தமக்குச் சொந்தமானது என்கிறது மியான்மர்.
உள்துறை அமைச்சக குழு ஆய்வு
இந்திய பகுதிகளை மியான்மர் ஆக்கிரமிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக முதன்மை செயலர் சுரேஷ் பாபு தலைமையிலான குழு நேற்று மோரே சென்றது.
மோரே தமிழர் கோயிலில்..
உள்துறை அமைச்சக குழுவினர் மோரே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
வடகிழக்கு மாநிலத்திலேயே 2வது பெரிய கோயில்
வடகிழக்கு மாநிலங்களிலேயே 2வது பெரிய கோயில்தான் மோரே தமிழர்களால் கட்டப்பட்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயிலையும் மியான்மர் உரிமை கோருவதால் தமிழர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
கோயில் அருகே எல்லைத் தூண்
பின்னர் மோரே தமிழர் கோயில் அருகே இருக்கும் மியான்மர் எல்லைத் தூணையும் பார்வையிட்டு பதிவு செய்து கொண்டனர். மேலும் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தி தற்போதைய நிலைமைகளை அக்குழுவினர் கேட்டறிந்தனர்