நீண்ட விவாதத்துக்குப் பின் மக்களவையில் இரவில் நிறைவேறியது உணவுப் பாதுகாப்பு மசோதா!
டெல்லி: மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பெரிய தேர்தல் அஸ்திரமாக இது பார்க்கப்படுவதால் இது நிறைவேற்றப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணிக்கும் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் 67 சதவீத மக்கள் குறைந்த விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவது உறுதி செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ.1.25 லட்சம் கோடியை செலவிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனியாவின் உணர்ச்சிகரமான உரை
முன்னதாக இதன் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆனால் ஓட்டெடுப்புக்கு முன்னதாக இரவு எட்டரை மணியளவில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
குரல் வாக்கெடுப்பு
நேற்று முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து பாஜகவினர் பேசினாலும் கூட கடைசியில் மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
வாக்குகளை அள்ளித் தருமா...
இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டமானது சோனியா காந்தியின் கனவுத் திட்டமாகும். ஆனால் இது தேர்தலை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஓட்டுப் பாதுகாப்பு மசோதா
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி விவாதத்தின் மீது பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ளது உணவு பாதுகாப்பு மசோதா அல்ல.. வாக்காளர் பாதுகாப்பு மசோதா. இந்த மசோதாவை உருவாக்க 4 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. 2009ஆம் ஆண்டே இந்த மசோதா கொண்டுவருவோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி அளித்தது. தற்போது நான்கரை ஆண்டுகாலம் கழித்து கொண்டு வந்துள்ளனர். அப்படியானால் இந்த நான்கரை ஆண்டுகாலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்றார்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போல
கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் இதேபோல ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவை காங்கிரஸுக்கு பெரும் வாக்குகளை அள்ளித் தந்தது. அதேபோல இந்த உணவுப் பாதுகாப்புத்திட்டம் வரும் தேர்தலில் வாக்குகளை ஈர்க்கும் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.