சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறவு...நாடாளுமன்றத்தில் பரபரப்பு
டெல்லி: உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின்போது திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை
பரிசோதனை முடிவில் சோனியா காந்தியின்உடல் நிலை கவலைப்படும்படியாக இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு தலைவலியும், சளித் தொல்லையும் இருந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் தனது காரிலேயே வீட்டுக்குத் திரும்பினார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக பரபரப்பு
உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று லோக்சபாவில் விவாதம் மற்றும் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்னதாக சோனியா காந்தி, அவசரமாக தனது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியுடன் வெளியேறினார். அவர்களுடன் அமைச்சர் குமாரி செல்ஜாவும் சோனியா காந்தியின் கையைப் பிடித்தபடி துணைக்கு வந்தார்.
உணர்ச்சிகரமான பேச்சு
முன்னதாக லோக்சபாவில் விவாதத்தில் கலந்து கொண்டு சோனியா பேசும்போது உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் அவசியம் குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.
காய்ச்சல் - சுகவீனம்
நேற்று முன்தினம் இரவு முதலே சோனியாவுக்கு காய்ச்சலும், உடல்நலக்குறைவும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நாள் முழுவதும் லோக்சபாவில் அமர்ந்து விவாதத்தி்ல பங்கேற்றதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
5 மணி நேரம்
எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 மணி நேரம் தங்கியிருந்தார் சோனியா. அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரு்ம் உடன் இருந்தனர்.
பின் வாசல் வழியாக வந்த பிரதமர்
பிரதமர் மன்மோகன் சிங் நள்ளிரவு வாக்கில் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அவர் வந்து சோனியாவைப் பார்த்து நலம் விசாரித்தார். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பல தலைவர்கள் சோனியாவைப் பார்க்க வந்திருந்தனர். ஆனால் யாரையும் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.