தாது மணல் கொள்ளையால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு- நல்லகண்ணு
களக்காடு: தாது மணல் கொள்ளையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இந்திய கம்யனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
இந்திய கம்யூ கட்சியின் மூத்த தலைவரும், தேசிய நிர்வாக குழு உறுப்பினருமான நல்லகண்ணு களக்காடு வந்தார்.
அங்குள்ள இந்திய கம்யூ கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆறுகளிலும், கடலகளிலும் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுகிறது. மனித உழைப்பி்ன் மூலம் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறையின் பேரில் தான் தாது மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதி்முறைகளை மீறி தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.
கடந்த 1990ம் ஆணடு முதல் பல கோடி ரூபாய் தாது மணல் அள்ளப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக கடற்கரைதான் அதிகமாக உள்ளது.
மணல் கொள்ளையால் கடற்கரை கிராமங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மட்டுமின்றி நெல்லை, குமரி மாவட்ட கடல் பகுதிகளிலும் தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு ஆய்வு குழுவினர் நெல்லை குமரி மாவட்டத்திலும் ஆய்வு நடத்த வேண்டும். தாது மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும். களக்காட்டில் மூடப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை மீண்டும் திறக்க வேண்டும்.
களக்காட்டில் மலை அடிவாரத்தில் வன விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறயினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.