வேற்று ஜாதியினர் சமைத்த சத்துணவு: சாப்பிட மறுக்கும் ராஜபாளையம் பள்ளி மாணவிகள்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் வேறு ஜாதியினர் சமைக்கும் சத்துணவை சாப்பிட மாட்டோம் என கடந்த ஓராண்டாக மறுத்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபாளையம் அருகே சுமார் 200 குடியிருப்புகள் கொண்டது கே.கம்மாபட்டி கிராமம். இங்கு வசிக்கும் அனைவருமே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாம். இந்த ஊரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், அதே ஊரைச்சேர்ந்த 50 மாணவர்களும், 25 மாணவிகளும் படித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இப்பள்ளியில் கிராமத்து மக்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் சத்துணவு ஊழியராக இருந்துள்ளார். கடந்தாண்டோடு அவரது பணிக்காலம் நிறைவு பெற்று விட, தற்போது தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மரகதவள்ளி (25) என்பவர் சமையல்காரராகவும், சரவணக்குமாரி (30) என்பவர் சமையல் உதவியாளராகவும் அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.
ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பள்ளிமாணவர்கள் கடந்தாண்டு ஜூலை 30 முதல், அப்பள்ளியில் சத்துணவு சாப்பிட மறுத்து வருகின்றனர். அதற்குக் காரணமாக 'பிற ஜாதியினர் சமைத்த சாபப்பாட்டை எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் தீட்டு வரும்' என்று சொல்லி வருகின்றனர் அம்மாணவர்களது பெற்றோர்கள்.
கலெக்டர், சத்துணவு திட்ட அதிகாரிகள் என அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தொடர்ந்து பள்ளி சத்துணவு சாப்பாட்டை புறக்கணித்து வந்திருக்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 11ம் தேதி, சத்துணவு திட்ட இணை இயக்குனர் வசந்தி, இந்த கிராமத்துக்கு சென்று ஊர் பெரியவர்களை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தற்போது மாணவர்கள் மட்டும் சத்துணவு எடுத்துக் கொள்கிறார்களாம். ஆனால், மாணவிகளின் சத்துணவு புறக்கணிப்பு தொடர்ந்து வருகிறதாம்.
என்றாவது ஒருநாள் மனம் மாறி மாணவிகளும் சத்துணவு சாப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தினமும் சத்துணவு தயாரிக்கும் ஊழியர்கள், பின்னர் மீதமாகும் அந்த உணவை மாடுகளுக்கு போட்டு விடுகிறார்களாம்.