தூத்துக்குடி: லாரி ஸ்டிரைக் வாபஸ்… துறைமுகப் பணிகள் விறுவிறுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதைத்தொடர்ந்து துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமாக தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளுக்கு காப்பர் கான்சன்ட்ரேட், நிலக்கரி, சல்பேட் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அந்நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடியில் 600க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் உட்பகுதியில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளுக்கு நடை ஒன்றிற்கு வாடகையை ரூ.700ல் இருந்து ரூ.1500ஆக அதிகரித்து தரவேண்டும் என்று வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் கடந்த 4தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அனைத்து லாரி உரிமையாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதாவது, கப்பல் வந்த 30தினங்களுக்குள் வாடகையை ஷிப்பிங் நிறுவனங்கள் வழங்கிடவேண்டும், துறைமுகத்தின் உள்ளே சன்டிங் அடிக்கும் லாரிகளுக்கு எடை வாடகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி&இறக்குமதி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
லாரி உரிமையாளர்களுடன் தனியார் தொழில் நிறுவனத்தினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் வாடகையை 30சதவீதம் உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.