அறிவியலையும், அதிமுகவையும் கலந்து கட்டி பேசிக் கலக்கிய வைகைச் செல்வன்!
தூத்துக்குடி: அதிமுக ஆட்சியில் திமுக இருக்கும் இடமே தெரியவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் அவர்.
மேலும் அறிவியலையும், அதிமுகவையும் கலந்தும் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தவும் அவர் தவறவில்லை.
வைகைச் செல்வனின் பேச்சிலிருந்து சில பகுதிகள்..
எப்படி மனித உடலில் பல பகுதிகள் உள்ளனவோ...
எப்படி மனித உடலில் பல பகுதிகள் இருக்கிறதோ அதேபோல் அதிமுகவில் இலக்கிய அணி, எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை என பல அணிகள் இருக்கின்றன.
இத்தனை இருந்தாலும்
இத்தனை அணிகள் இருந்தாலும் அதிமுக விற்கு உயிராக இருப்பது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆகும்.
இங்குதான் அதிகம்
எல்லா மாவட்டங்களை விடவும், இங்கு அதிக அளவு இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இந்த கோட்டைக்குள் எவராலும் நுழைய முடியாது.
வெட்டி வேலைன்னு சொன்னாங்க...
கடந்த 2008 ஆம் ஆண்டு இளைஞர்கள் பாசறை தொடங்கப்பட்ட போது பலர் வீண் முயற்சி என்று கருத்து சொன்னார்கள். ஆனால், 2011ல் உழைப்பையும், வெற்றியையும் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ச்சி பெற்றதும் இது விடாமுயற்சி என்றார்கள்.
கடமைக்குச் செய்யாதீங்க
இதனை கடமையாகச் செய்தால் வெற்றி கிடைக்கும், கடமைக்கு செய்தால் தோல்விதான் கிடைக்கும்.
திமுகவிலும் இருக்கே இளைஞரணி...
திமுகவிலும் இளைஞரணி என்று இருக்கிறது. அங்கு கடமைக்கு செய்கிறார்கள். அதனால்தான் தோல்வியைத் தழுவினார்கள்.
இருக்கும் இடம் தெரியலையே...
திமுக இருக்கும் இடமே தெரியவில்லை. குடும்பத்தை ஒருங்கிணைத்து கட்சியை நடத்த முடியாத கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார்.
'அதை'ப் பத்தி சொல்லவே வேண்டாம்
தேமுதிகவைப் பற்றி சொல்லவே வேண்டாம். அம்மாவுடன் கூட்டணி வைத்ததால் 29 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆனால் தற்பொழுது கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவரும் கட்டுப்பாட்டில் இல்லை.
அலையடிக்குது.. அலையடிக்குது...
கட்சி உறுப்பினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால், மக்கள் மத்தியில் அதிமுக அரசிற்கு ஆதரவு அலை வீசுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஆளுக்கு 3 ஓட்டுப் பிடிங்க...
ஒவ்வொரு அதிமுக உறுப்பினரும் ஆளுக்கு தலா 3 வாக்குகளை சேகரிக்க வேண்டும். இன்னும் 90 நாட்களுக்குள் 25,000 புதிய உறுப்பினர்களையும், பொறுப்பாளர்களையும் நியமிக்க வேண்டும்.
நாற்பதையும் பிடிக்கனும்
அதிமுகவின் சாதனைகளை, துண்டு பிரசுரம் விநியோகித்தும், எஸ்.எம்.எஸ் மூலமும் விளக்க வேண்டும். வரும் எம்.பி தேர்தலில் 40 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, பிரதமாகும் வாய்ப்புள்ளது. அடுத்த பிரதமர் நம்ம அம்மாதான் என்று பேசி முடித்தார்.