ஆண் குழந்தை ஆசை: 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த பாகிஸ்தான் தாத்தா கைது
லாகூர்: பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான 55 வயது ஆண், ஆண் குழந்தை வேண்டி 20 வயது இளம் பெண்ணை விலைக்கு வாங்கி, மணந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ளார்.
பாகிஸ்தான், ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற பகுதியைச் சேர்ந்த முதியவர் முகமது அலி. ஐம்பத்தைந்து வயதான இவருக்கு ஏற்கனவே மணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
மூன்றும் பெண் குழந்தைகளாக அமைந்ததில் இவருக்கு ஏகப்பட்ட மனவருத்தமாம். அதனால், வேறு ஒரு இளம் பெண்ணை மணந்து அவர் மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார் முகமது.
அதனைத் தொடர்ந்து, லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பேகம் பீபி என்ற 20 வயது பெண்ணை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி மணந்தார். பேகம் பீபியை சீசாவாடனில் தனியாக குடிவைத்தார்.
ஏறக்குறைய மணமாகி ஒரு மாதத்தைக் கடந்து விட்ட நிலையில், முகமதுவின் பாலியல் துன்புறுத்தல்கள் தாங்காமல் போலீசில் புகாரளித்தார் பேகம். விரைந்து வந்து பேகத்தை மீட்டு, முகம்மதுவை கைது செய்தனர் போலீசார்.
போலீஸ் விசாரணையில் முகம்மது, ‘எனது 2-வது மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்று தந்தவுடன் அவரை விட்டு விடுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேகம் அளித்த வாக்குமூலத்தில் முகம்மது தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். எனவே, முகம்மது தற்போது சிறையில் வாழ்ந்து வருகிறார்.