அரபு நாட்டு நபருக்கு சில மாதங்கள் மட்டுமே மனைவி… கேரள சிறுமி நீதி கேட்டு வழக்கு
கோழிக்கோடு: கேரளாவில் கட்டாய திருமணம் செய்துகொண்டு தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஐக்கிய அரபுக்குடியரசு நாட்டைச் சேர்ந்த நபரின் மேல் மைனர் சிறுமி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார்.
ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர், கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த சிறுமி குற்றம் சாட்டினார்.
போலீசில் புகார்
இந்நிலையில் தனது மகளுக்கு அனாதை இல்லத்தில் உள்ளவர்கள், கட்டாய திருமணம் செய்து வைத்தனர் என்று கூறி அந்த சிறுமியின் தாயார், போலீசில் புகார் அளித்தார்.
மனித உரிமை ஆணையம்
அதன் அடிப்படையில் சிறுவர், நீதிச்சட்டப்படி வரதட்சணை கொடுமைக்கு எதிரான குற்றம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றம் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து முழு விவரத்தை அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், ஆசிரம நிர்வாகம் பெற்றோர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது என்று ஆவணங்களை காட்டியுள்ளது.
கட்டாய திருமணம்
இதேபோல் மனித உரிமை ஆணையத்தில், சிறுமியின் தாயார் அளித்துள்ள புகார் மனுவில், "வறுமை காரணமாக ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது மகள் படிக்க ஆசைப்பட்டாள். ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை வெளிநாட்டுக்காரருக்கு கட்டாய திருமணம் செய்ய, அனாதை அல்ல நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார். இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு கோழிக்கோட்டில் திங்களன்று போராட்டம் நடத்தப்பட்டது.
கேரளாவில் சகஜம்தான்
கேரளாவை சேர்ந்த பெண்களை அரேபியர்கள் திருமணம் செய்துகொள்வது கேரளாவில் உள்ள சில மாவட்ட முஸ்லிம்களிடையே வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஐக்கிய அரபு குடியரசு நபரின் தகப்பனாரும் முன்பு இதுபோன்று கேரளாவில் திருமணம் செய்து, அவரது மனைவியை கேரளாவிலேயே விட்டுச்சென்றுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.