மும்பை பத்திரிக்கையாளர் கற்பழிப்பு: குற்றவாளிக்கு 80 முறை போன் செய்த கான்ஸ்டபிள்..?
மும்பை: மும்பைப் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஐந்து குற்றவாளிகளில் ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், குற்றம் நடைபெற்ற பின்னர் கிட்டத்தட்ட 80 முறை தொலைபேசியில் பேசியது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். கடைசிக் குற்றவாளி கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில், மும்பை குற்றப்பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சலீம் முஜாவர் என்பவர், மும்பை பாலியல் குற்றவாளியான பன்காளியுடன் கடந்த மாதம் இறுதி முதல், சம்பவம் நடந்த அன்று இரவு வரை கிட்டத்தட்ட 80 முறை மொபைல் போனில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பன்காளி முன்பு போலீஸ் ஆள்காட்டியாக பணி புரிந்ததாகவும், அதற்காகவே கான்ஸ்டபிள் அடிக்கடி அவனை போனில் தொடர்பு கொண்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. சம்பவம் நடைபெற்ற உடன் பன்சாலியை சலீம் தொடர்பு கொண்டதாகவும், அவன் அவரை திசை திருப்புவதற்காக வேறு கூட்டாளிகளின் பெயரைக் கூறியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், ஏற்கனவே வேறு சில குற்றங்களில் தொடர்பு கொண்டுள்ள பன்காளியைச் சந்தேகத்தின் அடிப்படையிலேயே மொபைலில் தொடர்பு கொண்ட சலீம், என்எம் ஜோஷி மார்க்கில் உள்ள குற்றப்பிரிவு அலுவகத்திற்கு விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட பன்காளி, அவரது வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். முஜாவர் சந்தேகத்தின் பேரில் பன்காளியை அழைத்ததே அவர் தப்பியோட காரணம் என சில போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர்.