அண்ணியவா காப்பியடிக்க விடமாட்டேங்கிற: ஆசிரியர்களை தாக்கிய மமதா கட்சி தலைவரின் ஆட்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரின் மனைவியை காப்பியடிக்க விடாததால் கல்லூரி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள இதாஹரில் செயல்பட்டு வருகிறது மேக்நாத் சாஹா கல்லூரி. அந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் மனைவி தேர்வு எழுதினார்.
தேர்வு அறையில் அவர் காப்பியடித்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் இது குறித்து கல்லூரி முதல்வர் ஸ்வப்னா முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் விடைத்தாளை வாங்கிவிட்டு அனுப்புமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வினாத்தாள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் 10 முதல் 12 பேர் கல்லூரிக்குள் வந்து முதல்வரின் அறைக்கு சென்று வினாத்தாளை திருப்பித்தருமாறு எச்சரித்துள்ளனர். அவர் மறுக்கவே அலுவலகத்தை சூறையாடிவிட்டு, அவரையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் வினாத்தாளை பறித்த ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களை தாக்கியுள்ளனர். ஆனால் அந்த திரிணாமூல் தலைவரோ தேர்வு அறையில் தனது மனைவியிடம் சிலர் தகாத முறையில் நடந்து அவரை தேர்வு எழுத முடியாமல் செய்ததாக தெரிவித்துள்ளார்.