நவநீதம் பிள்ளையுடன் எழிலன் மனைவி சந்திப்பு! முல்லைத்தீவில் ஆய்வு!!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நேற்று ஆய்வு நடத்தினார். அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் மனைவி அனந்தியும் சந்தித்து பேசினார்.
இலங்கை வருகை தந்துள்ள நவநீதம்பிள்ளை தலைமையிலான ஐ.நா. குழு நேற்றுமுன் தினம் யாழ்ப்பாணம் சென்றது.
எழிலன் மனைவி சந்திப்பு
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி, நவநீதம் பிள்ளை குழுவினரை சந்தித்தார்.
நவநீதம் பிள்ளையிடம் சொன்னது என்ன?
அப்போது, போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை படையினரிடம் எனது கவணர் உள்ளிட்ட, பெருமளவு போராளிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் தலைமையில் சரணடைந்தனர். அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று முறையிட்டார்.
முள்ளிவாய்க்காலில் நவநீதம் பிள்ளை
இதைத் தொடர்ந்து இறுதிப் போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளை நவநீதம் பிள்ளை பார்வையிட்டுள்ளார்.
மக்களுடன் சந்திப்பு
இறுதிப்போர் நடந்த பகுதிகளை பார்வையிட்ட நவநீதம்பிள்ளை, கேப்பாப்பிலவில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிக தங்குமிடங்களில் குடியேற்றப்பட்டுள்ள மக்களையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
கதறிய முல்லைத்தீவு மக்கள்
நவநீதம்பிள்ளையிடம், முல்லைத்தீவு மக்கள் காணாமல் போனவர்களை மீட்டுத் தரும்படியும் இலங்கை படையினரால் பறிக்கப்பட்ட தமது நிலம், வாழ்விடங்களை மீட்டுத் தரும்படியும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
திருகோணமலை பயணம்
முல்லைத்தீவில் பயணத்தை முடித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை நேற்றிரவு இரணைமடு ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு திருகோணமலைக்கு சென்றார்.