நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கோவை ஆறுச்சாமி
கோவை: கோவையில் கல்வித் தந்தையாக வலம் வரும் பவர் மனிதர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கலக்கு கலக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியிலும் சரி கொங்கு மண்டல மணல் மனிதர் என்று வர்ணிக்கப்படும் அந்த 6 முகம் கொண்ட ஆறுச்சாமி மிகுந்த பவர் உடையவாரக விளங்கி வருகின்றார்.
காவிரி கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆளும் கட்சி, எதிர்கட்சி மட்டும் இன்றி சர்வ கட்சிகள் சார்பில் நடைபெறும் மாநாடு, பொதுக் கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வைட்டமின் ப.வை வாரி வழங்கி வருபவர்.
மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் கல்லூரியில் படிக்க தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் பெயரில் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகை அளித்து வருகின்றாராம். இதன் மூலம் கல்வித் தந்தை என்ற பட்டத்தை யாரும் எதிர்பாராத வகையில் தட்டிச் சென்றுவிட்டாராம்.
இதனால் இவரது சேவையைப் பாராட்டி கோவை மட்டும் இன்றி கொங்கு மண்டலம் மற்றும் தேனி மாவட்டம் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாபெரும் பாராட்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றதாம்.
தமிழகத்தில் விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணண் குதிக்கப் போகின்றார். கரன்சியைப் பற்றி கவலை இல்லை வெற்றி மட்டும் தான் குறி என ஆதரவு வட்டாரம் தொடையை தட்டுகின்றது. ஆளும் கட்சி சார்பில் நின்று வெற்றி பெறவே அண்ணன் விரும்புகின்றார். அதற்கான சூழலுக்காக காத்துள்ளார் என உற்சாகம் பொங்க சொல்லுகின்றனர் கோவை வாசிகள்.