திருச்செந்தூர் அருகே கடல் தாதுமணல் லாரியை சிறைபிடித்து மீனவர்கள் போராட்டம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள பெரியதாழையில் கடல் தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவி மினரல்ஸ், பி.எம்.சி உள்ளிட்ட கடல்தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஆய்வுக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் மணல் எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளவிளை கடல் பகுதியில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி உவரி, மணப்பாடு, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்துகொண்டு இருந்தது.
தாது மணல் லாரியில் ஏற்றப்பட்டு வருவதை அறிந்த பெரியதாழை பகுதி மீனவமக்கள் தங்கள் ஊருக்குள் வைத்து லாரியை வழிமறித்து சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் விசாரணை முடியும் வரை எங்கள் ஊர் வழியாக கடல்தாது மணல் ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதிகாரிகளும் இதற்கு சம்மததித்தனர். இப்படி இருக்கும்போது விதிமுறைகளை மீறி தாதுமணல் ஏற்றிச் சென்ற இந்த லாரியை நாங்கள் சிறை பிடித்துள்ளோம்.
எனவே இந்த லாரியை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அந்த எப்.ஐ.ஆர் நகலை பெரியதாழை பகுதி மீனவ பொதுமக்களான எங்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டம் நடத்தி வரும் மீனவ மக்களிடம் அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செந்தூர், மணப்பாடு, பெரியதாழை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.