வேலைப்பளு.... தள்ளிப்போகும் திருமணங்கள்: கருமுட்டைகளைச் சேமிக்கும் தைவான் பெண்கள்
தைபே: எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடும் தைவான் பெண்கள், எதிர்காலத்தில் குழந்தைப்பேறைக் கணக்கில் கொண்டு தங்கள் கருமுட்டைகளைச் சேமிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்களாம்.
நமது பாட்டிக்காலத்தில் எல்லாம் 12, 13 வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள் எனக் கதைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்றோ பெண்களின் திருமண வயது கூடிக் கொண்டே வருகிறது.
அதற்குக் காரணம், கல்வியறிவு கொண்ட பெண்கள் சிலகாலமாவது உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க நினைப்பது தான். திருமணத்திற்குப் பிறகு இதன் சாத்தியம் குறைவு என எண்ணுகிறார்கள். உலகளவில் பரவிக் காணப்படும் இந்தக் கருத்துக்களால், குழந்தைப்பேறு பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதும் தைவான் பெண்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கருமுட்டைகளை சேமிக்கத் தொடங்கி விட்டார்களாம்.
தைவான் பெண்கள்....
ஆசியாவில் உள்ள 14 நாடுகளில் பெண்கள் வேலை பார்ப்பதில் முன்னிலை வகிப்பது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் தான். இவற்றிற்கு அடுத்தப்படியாக தற்போது தைவான் நாட்டிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மன அழுத்தம்....
தன்னம்பிக்கையோடு வேலைக்கு சென்றாலும், பாரம்பரிய எதிர்பார்ப்புகளான திருமணம், குழந்தைப் பேறு மற்றும் வேலைப்பளு ஆகியற்றின் தாக்கத்தால் கடுமையான மன அழுத்தத்திர்கு ஆளாகிறார்களாம் இப்பெண்கள்.
வேலைபாதுகாப்பு....
தைவானில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால், பெண்கள் தங்கள் வேலையினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதன் எதிரொலியாக, 1980களில் 24 என்றிருந்த திருமண வயதினை தற்போது தைவான பெண்கள் 30 என்று தள்ளிப்போட்டுள்ளனராம்.
குழந்தைப்பேறு....
திருமண வயது தள்ளிப் போவதினால், குழந்தைப்பேறு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அச்சப்படும் இவர்கள், முன்னெச்சரிக்கையாக தங்களது கருமுட்டைகளை சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.
கருமுட்டை சேமிப்பு மையங்கள்....
இதற்கென தைவானில் பிரத்யேக கருமுட்டை சேமிப்பு மையங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளதாம். இது குறித்து கருமுட்டைசேமிப்பு மையத்தை நடத்தி வரும் லெய் சிங் ஹுவா கூறும்போது, ‘காலதாமதமாக நடைபெறும் திருமணத்தால் பிரச்சினை வரும்போது இம்மாதிரி கரு முட்டைகளை சேமித்து வைத்திருந்தால், அவர்கள் கரு முட்டை தானத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் எண்ணிக்கை....
மேலும், நான்கு வருடங்களுக்கு முன்னால், ஒரு வருடத்திற்கு இருபது பேர் கருமுட்டைகளை சேமித்த நிலை மறைந்து தற்போது இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள்ளாகவே 40 பேருக்கு தாங்கள் இந்த சேவையை செய்துள்ளதாக கூறியுள்ளார் லெய் சிங் ஹுவா.