சீனாவில் பயங்கரம்: சிறுவனை கடத்தி.. கண்ணை தோண்டி 'விழி வெண்படல'த்தை மட்டும் வெட்டிய கொடூரம்
பெய்ஜிங்: சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது.
சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனைக் காணவில்லை. அவன் காணாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து அவன் முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில் குற்றுயிராய் அலறித் துடித்துக் கொண்டிருந்ததை பெற்றோர் பார்த்திருக்கின்றனர்.
இதைக் கண்டு அலறிய பெற்றோர் அவனைத் தூக்கிப் பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர். அவனது இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பிய கையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்திருக்கின்றனர்.
அந்த பெற்றொருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவனின் இரண்டு கண்களும் தோண்டி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுவனின் தோண்டி எடுக்கப்பட்ட கண்களுடன் மருத்துவமனைக்குப் பதறிப் போன பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் சொன்ன விஷயம் இன்னொரு பயங்கரம்..
அதாவது சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்த கும்பல், சிறுவனின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்து தப்பியிருக்கிறது. சீனாவில் உடல் உறுப்பு தானங்களுக்காக 3 லட்சம் நோயாளிகள் காத்திருந்தாலும் இவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்குத்தான் சரியான உடல் உறுப்புகள் கிடைக்கின்றனவாம்.
இதனால் சட்டவிரோதமாக இப்படி கடத்தலில் ஈடுபட்டு மனித உறுப்புகளை வேட்டையாடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் கொடூரமும் அரங்கேறி வருகிறதாம்..