சாக விரும்பவில்லை.. வாழ விரும்புகிறேன்...என்னை மன்னிப்பீர்களா?: மைக் டைசன் உருக்கம்
லண்டன்: முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக்டைசன் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும், தான் சாக விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்குப் பேர் போனவர் மைக் டைசன். காதைக் கடித்தார், கற்பழித்தார் என இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்த ஹெவி வெயிட் குத்துச்சண்டை வீரர் விடுதலை பெற்ற பின்னர் போதை மருந்துகளுக்கு அடிமையானார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தனது மனம் திறந்து பேசியுள்ளார் மைக்டைசன்.
பிரபல குத்துச்சண்டை...
தற்போது 47 வயதாகும் மைக் டைசன் முன்னாள் ஹெவி வெயிட் குத்துச்சண்டை வீரர் ஆவார். மிகவும் பிரபல வீரரான இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
கற்பழிப்பு வழக்கு....
இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு சர்ச்சையில் சிக்கினார் மைக். அதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் கைதாகி 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனால், 3 வருட சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார் மைக்.
வெற்றிகள்...
மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்த மைக், 1996-ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச் சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார்.
காதைக் கடித்த மைக்....
1997ம் ஆண்டு உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டத்திற்கான போட்டியில் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதிய மைக், போட்டியின் போது கோபத்தில் ஹோலிபீல்டின் காதை கடித்து துப்பினார். இதனைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் மைக்.
மது அடிமையான மைக்...
தொடர்ந்து பிரச்சினையில் சிக்கிய மைக்கிற்கு, அவரது மகளின் மரணம் அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. மனமுடைந்த மைக் மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமையானார்.
மறுவாழ்வு வேண்டும்...
மீடியாக்களின் வெளிச்சத்திற்கு ஒதுங்கியிருந்த மைக், சமீபத்தில் தன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ‘நான் ஒரு கெட்டவன். நான் பல்வேறு கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். நான் மன்னிக்கப்பட வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
சாவின் விளிம்பில்....
நிதானமான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். நான் சாக விரும்பவில்லை. ஆனால், பல்வேறு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையான நான் சாவின் விளிம்பில் நிற்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.