உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! - ரத்தன் டாடா
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ள நிலையில் ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா மேலும் கூறியிருப்பதாவது:
பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது ஆரம்ப காலத்தில்.
சமீபகாலமாக அந்த மதிப்பு சரிந்துள்ளது. பொருளாதார நிலையின்மை குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்து வருகிறது. இதனை அரசு மிகவும் மெதுவாகவே புரிந்து கொண்டுள்ளது. அதற்கான விலைதான் இப்போது நாம் தருவது.
ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகள், அதன்படியே முழுமையாக அமல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு நன்மை அளிப்பதாக இருக்கும்.
அரசு வெளியிடும் கொள்கைகளை தனியார் நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்துக்காக மாற்றுகிறார்கள், அல்லது கொள்கைகளை அமல்படுத்துவதை தாமதப்படுத்த வேண்டிய வழிகளைத் தேடுகிறார்கள். இதுபோன்ற சக்திகளால் அரசு பின்வாங்குவதும் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்," என்றார்.