அட டாலருக்கு நிகரா ஏன் பார்க்கணும்... சென்ட் கணக்குல பாத்தா 1 ரூபாய்= 1.5 சென்ட்!!
சென்னை: நாடு முழுக்க இந்த இரண்டு வாரமாக பெருத்த கவலையோடு பேசிக் கொள்வது ரூபாய் மதிப்பு சரிந்து வருவது பற்றித்தான்.
ஆனால் உண்மையில் ஒரு விஷயத்தில் நாம் சந்தோஷப்பட வேண்டும். டாலரை ரூபாயோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்காமல், சென்ட்டோடு ஒப்பிட்டுப் பாருங்கள்... இப்போது ரூபாய் மதிப்பு அதிகமாக இருப்பதைக் காணலாம்.
ஆமாம்... ஒரு ரூபாய்க்கு 1.5 சென்ட் ஈடாகத் தரவேண்டும். இப்போது யோசித்தால்... ரூபாய் மதிப்பு எவ்வளவோ பரவாயில்லை என்றுதானே தோன்றுகிறது.
இப்படிக் கணக்கிட்டால், ஒரு ரூபாய்க்கு கூடுதலாக 0.50 சென்ட்களைத் தரவேண்டும் அமெரிக்கர்கள்.
புதிய ரூபாயை ஏன் உருவாக்கக் கூடாது?
1947-ம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை ரூபாயின் வாங்கும் சக்தி நூறில் ஒன்றாகக் குறைந்துவிட்டது. எனவே புதிய ரூபாயை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. புதிதாக உருவாக்கப்படும் ஒரு ரூபாய்க்கு, இன்றைக்கு உள்ள 100 ரூபாய் சமம் என நிர்ணயிக்க வேண்டும். இது மதிப்பிழந்த நடப்பு பணத்தை தானாகவே சந்தையிலிருந்து விரட்டும்.
கிரஷாம் விதி
கெட்ட பணம் நல்ல பணத்தை விரட்டிவிடும் என்பது பொருளாதாரத்தில் கிரஷாமின் விதி. நாம் அதைக் கொஞ்சம் மாற்றி, நல்ல பணத்தைக் கொண்டு இப்போது நம்மிடமுள்ள மதிப்பிழந்த பணத்தை விரட்டியடிப்போம். இப்போதுள்ள நூறு ரூபாய்க்கு, புதிய ஒரு ரூபாய் சமம் என்று வைத்தால்... ஹை.. அமெரிக்க டாலருக்கு மதிப்பு தன்னால இறங்கிடுமில்ல!
பிரிட்டிஷ் பவுண்ட் மட்டும் என்னவாம்...
நம்மை ஆண்ட பிரிட்டனின் பணமான பவுண்டுக்கு ரூ 101 தரவேண்டும் இன்றைக்கு. இந்திய வழக்கப்படி ரூ 101 என்பது ஒரு லக்கி நம்பரல்லவா... வெறும் நம்பராக இருந்தால் அப்படி எடுத்துக் கொள்ளலாம்.. பாக்கெட்டைப் பதம் பார்க்கும் பணக் கணக்கு அல்லவா... கஷ்டமாகத்தான் இருக்கும். இதையே புதிய 1 ரூபாய் கணக்கில் பார்த்தால் கிட்டத்தட்ட இரு நாணயங்களும் சமமாகிவிடும். இன்றைய ரூபாய் மதிப்புப் படி பார்த்தாலும் கூட ஒரு ரூபாய் .99 பென்ஸுக்கு சமம். 101 ஆக இருந்தாலும், .99 ஆக இருந்தாலும், இந்தியர்களைப் பொறுத்த வரை லக்கி நம்பர்கள் அல்லவா!
யூரோ...? புதிய ரூபாயை விட 1.3 மடங்கு குறைந்த மதிப்புடையதாக இருக்கும்.
யென்னை விட ரூபா உசத்திதான்...
ஜப்பான் நாணயமான யென்-ஐ விட இப்போதைய ரூபாய் மதிப்பு அதிகம். ஒரு ரூபாய்க்கு ரூ 1.51 யென்கள் தரவேண்டும் (அப்பாடா...). மன்மோகன் இந்த விஷயத்தில் ஜப்பானை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டார் பாத்தீங்களா...!
தங்கம்
ரூபாய்க்கு அடுத்து Liquidity அதிகம் உள்ளது தங்கம்தான் என்பார்கள். ஆனால் அந்தத் தங்கத்தின் விலை எங்கோ எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
1950-ல் பத்து கிராம் தங்கம் விலை ரூ 99 மட்டுமே. இன்று? ரூ 31310! கிட்டத்தட்ட 316 மடங்கு விலை அதிகம். நாமதான் எதையும் பாஸிடிவா யோசிக்கிறோமே... இப்படிப் பாருங்க... பத்துகிராம் தங்கத்துல நூறில் ஒரு பங்கு.. அதாவது ஒரு யூனிட் 0.1 கிராம் விலையைக் கணக்கிட்டுப் பாருங்க... அதன் விலை ரூ 313தான் வரும். ஆக கூலி வேலை செய்பவர்கள் கூட ஒரு யூனிட் தங்கம் (துகள்) வாங்கலாமில்ல!
தினமும் தங்கம் விலை ஏறிடுச்சு, ரூபாய் மதிப்பு குறைஞ்சிடுச்சின்னு புலம்பறதை விட, இப்படி பாஸிடிவ்வா யோசிச்சா தங்க பஸ்பம் சாப்பிட்ட மாதிரி கொஞ்சம் தெம்பா இருக்காதா!
சரி... கொஞ்சம் சீரியஸா யோசிப்போம்...
1947-ல் நமது ரூபாய் மதிப்பு எவ்வளவு தெரியுமா... 1 பவுன்ட் ஸ்டெர்லிங்குக்கு இணை. அதாவது பிரிட்டன் நாணய மதிப்பும் நமது ரூபாய் மதிப்பும் சமம். ஆனால் இன்று பவுண்ட் ரூ 101 ரூபாய் ஆகிவிட்டது. அதாவது அன்றை ஒரு பைசாவுக்கு சமம், இன்றைய ஒரு ரூபாய். அதனால்தான் 1000 ரூபாயை நாணயமாக அச்சிட்டுக் கொள்ள ரிசர்வ் வங்கிக்கு பாராளுமன்றம் அனுமதி அளித்ததோ!
என்னதான் தீர்வு?
என்ன செய்தால் ரூபாய் மதிப்பு மாறும்... உயரும்?
பழைய ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதுதான். புதிய ரூபாய் மற்றும் நாணயங்களை அச்சிட்டு அதன் மதிப்பை உயர்த்த வேண்டும். இப்போதுள்ளதை விட 100 மடங்கு அதிக மதிப்புள்ளதாக அந்த புதிய நாணயம் அமைய வேண்டும். 65 வயதில் ஒரு பணியாளரே ரிடையர் ஆகும்போது, மதிப்பு 65 ஆக தாழ்ந்துவிட்ட பழைய ரூபாயை மட்டும் இன்னும் எதற்கு வைத்திருக்க வேண்டும்?
கருப்பு வெளுப்பாகுமே...
பழைய நோட்டுகளையெல்லாம் வங்கிகளில் கொடுத்து புதிய மதிப்புயர்த்தப்பட்ட ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு அரசு அறிவிக்க வேண்டும்.
இதில் இன்னொர பெரிய நன்மை உள்ளது... கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் கண்டிப்பாக வெளியில் வந்தே தீர வேண்டும். இரண்டாவது அடித்து வைத்திருக்கும் கள்ளப் பணத்தின் மீது ஆர்வம் போய், உருவாக்கியவர்களே அழித்துவிடுவார்கள்!
அப்படின்னா.. இதுதான் பைனல் தீர்வா?
இது ஒரு தீர்வுதான்.. ஆனால் ஷார்ட் கட். உண்மையான தீர்வு உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பிலும், ஏற்றுமதி அதிகரிப்பிலும் இருக்கிறது. அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பே சிதைந்துவிட்ட ஒரு நாட்டில் இது அத்தனை சீக்கிரம் சாத்தியமாகுமா?