நான் குற்றவாளி என்று நிரூபிப்பவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு: அசாரம் பாபு அறிவிப்பு
சூரத்: தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை உண்மை என்று நிரூபிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிப்பதாக மத குருவான அசாரம் பாபு அறிவித்துள்ளார்.
மத குருவான அசாரம் பாபு மீது 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வரும் 30ம் தேதி அதாவது நாளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகுமாறு அசாரம் பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால் ஆஜராக தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று அசாரம் போலீசாரிடம் மனு கொடுத்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதுடன் அவர் நாளை ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தில் அசாரம் பாபு கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தருகிறேன் என்றார்.
இதற்கிடையே அசாரம் பாபு பிரச்சனையை தீர்க்க தூதுவரை அனுப்பியதாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.