பக்கத்து வீட்டுக்காரர் நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற எஸ்.பி. ஆபீஸ் கண்காணிப்பாளர் கைது
நெல்லை: நெல்லையி்ல் பக்கத்தில் வசித்தவர் வளர்த்து வந்த நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற எஸ்பி அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை விஎம் சத்திரம் இபி காலனியில் வசித்து வருபவர் ஐயப்பன். தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி ராணி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டில் 5 வயது நாயை வளர்த்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அருள்ராஜ். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தபால் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும் பாளையங்கோட்டை மின்வாரியத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
ஐயப்பன் வீட்டு நாயும், தெரு நாய் ஒன்றும் குரைத்து கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்தார் அருள்ராஜ். இதையடுத்து தாந் வைத்திருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து ஐயப்பன் வீட்டு நாயை சுட்டு விட்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த ஐயப்பன் நாய்க்கு மருத்து போட்டு முதலுதவி அளித்தார். நாய்க்கு மேலும் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவரை அழைத்து வருவதற்காக அவர் சென்று விட்டார். இந்த நிலையில், படுகாயமடைந்த நாய் இறந்து போனது.
நாய் இறந்து போனதைப் பார்த் அருள்ராஜ் அதை இழுத்துக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். இதை அறிந்த ஐயப்பன் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அருள்ராஜ் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டுதல், மிருக வதை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் புகார் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.