மின்சார ரயிலில் பயணித்த மாணவர்… கம்பத்தில் மோதி கூவத்தில் விழுந்த பரிதாபம்
சென்னை: மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் கம்பத்தில் மோதி கூவம் ஆற்றில் விழுந்து படுகாயமடைந்தார்.
எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் நேற்று முன்தினம் இரவு ஆதம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்ற மாணவர் பயணம் செய்தார். அவருடன் நண்பர்கள் இருவரும் சென்றனர்.
படிக்கட்டில் நின்றபடியே கார்த்திக் பயணம் செய்தார். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை தாண்டி கூவம் ஆற்றுப்பாலத்தில் சென்ற போது சிக்னல் கம்பத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதிய கார்த்திக் அதே வேகத்தில் கூவம் ஆற்றில் தவறி விழுந்தார்.
இதனால் உடன் சென்ற நண்பர்கள் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். கிண்டி ரயில் நிலையம் சென்றதும் அவர்கள் அங்கு இறங்கி இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி வாலிபர்களும் ஆற்றில் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக் சாக்கடை நீரில் மூழ்கிய நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. வலி தாங்க முடியாமல் கார்த்திக் அவதிப்பட்டார். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற கார்த்திக், மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.